Category Archives: Hot News

மாநில கட்சிகளில் அதிமுக – திரிணாமுல் காங்கிரசுக்கு அதிக இடம்: கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி, பிப். 14–

‘டைம்ஸ் நவ்’ டி.வி.யும், சி.ஓட்டர் அமைப்பும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தின.

இதில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 227 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாநில கட்சிகளின் செல்வாக்கு மிகுந்த மாநிலங்களில், முக்கிய கட்சிகளுக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க. 27 தொகுதிகளின் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. தி.மு.க.வுக்கு 5 இடங்களும், தே.மு.தி.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு 24 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் 14 இடங்களை பெறும்.

காங்கிரசுக்கு 2 இடமும், பா.ஜனதாவுக்கு 1 இடமும், மற்ற கட்சிகளுக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–13, தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி–10, தெலுங்கு தேசம்–10, பா.ஜனதா–2, இதர கட்சி கள்–1.

கர்நாடகா: காங் கிரஸ்–14, பா.ஜனதா–11, ஐக்கிய ஜனதா தளம்–2, ஆம் ஆத்மி–1.

கேரளா: இடது சாரி கூட்டணி–9, காங்கிரஸ்–7, பா.ஜனதா–1, இ.யூ.முஸ்லிம் லீக்–2, கேரளா காங்கிரஸ் (மணி)–1.

மகாராஷ்டிரா: பா.ஜன தா–15, சிவசேனா–15, காங்கிரஸ்–8, தேசிய வாத காங்கிரஸ்–5, இதர கட்சிகள்–4.

ஒடிசா: பிஜூ ஜனதா தளம்–12, காங்கிரஸ்–7, பா.ஜனதா–2.

உத்திரபிரதேசம்: சமாஜ் வாடி கட்சி–20, பகுஜன் சமாஜ் கட்சி–21, பா.ஜனதா–34, காங்கிரஸ்–4, ராஷ்டிரிய லோக் தளம்–1.

பஞ்சாப்: காங்கிரஸ்–6, சிரோன்மணி அகாலித் தளம்–5, பா.ஜனதா–2.

பீகார்: பா.ஜனதா–21, ஐக்கிய ஜனதா தளம்–5, ராஷ்டிரிய ஜனதாதளம்–12, லோக் ஜனசக்தி–1, காங் கிரஸ்–1.

அரியானா: பா.ஜனதா–6, காங்கிரஸ்–1, ஆம் ஆத்மி–1, இதர கட்சிகள்–2.

அசாம்: காங்கிரஸ்–7, பா.ஜனதா–5, இதர கட்சிகள்–2.

இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

(mm)

இந்தியா உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2028ம் ஆண்டு இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
வரும் 2018 ஆம் ஆண்டு 2,481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018ம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும். மேலும் வரும் 2023ஆம் ஆண்டு 4,124 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 ஆவது இடத்தை பிடிக்கும் என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு 6,560 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடா பத்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
(tt)

“மாஃபியா ‘ கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்!

தமிழகம் முழுவதும் பணத்தாசை காட்டும், செல்வந்தர்களிடம் மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 22 ஆயிரத்து, 877 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. இதில், 19 ஆயிரத்து, 388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது. காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை உள்ளது. திறந்தவெளி காடுகளில் மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் மக்களுக்கு அனுமதி உண்டு.

மாநிலம் முழுவதும் வனச்சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்ம நபர்களின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது. வனக்குற்றத்தை தடுக்க, வனத்துறையினர் மேற்கொண்ட எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை.
வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ;

சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும் வனக்குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், பலரும் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில் மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழை இளைஞர்களை வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள, “மாஃபியா’ கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் படித்த, படிக்காத ஏழை இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். வனப்பகுதி அருகே வசிக்கும், படிப்பறிவு இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை, சமூக விரோத செயலுக்கு, மர்ம கும்பல் பயன்படுத்தி ஏவியவர்கள் எங்கோ இருக்க, வனக்குற்றத்தில்ஈடுபட்டவர்களை மட்டுமே, வனத்துறையினர் கைது செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏழை இளைஞர்களுக்கு குறி வைக்கும் மாஃபியா கும்பல் மீது, வனத்துறையினரும், அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களிடம், வனக்குற்றத்துக்கான தண்டனை குறித்தும், வனம், வனச்சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வனம் அருகே வசிப்போரிடம், சகோதரத்துவத்தோடு வனத்துறையினர் பழகினால், மாஃபியாக்கள் குறித்த தகவலை எளிதாக சேகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

(dm)

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட “தமிழ்மொழி’

சிங்கப்பூர் “சாங்கி’ பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு பலகைகளில், “தமிழ்’ மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் “தற்காலிக அனுமதி கடிதம்’ கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

 

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

 

அங்குள்ள “சாங்கி’ பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் “தமிழ்’ மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.

(dm)

புற்றுநோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள்!

உலகில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்நோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் நோய்க்கான காரணம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டால், இந்நோயால் இறப்போரின் எண்ணிக்கையையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணகுமார், விஜயபாஸ்கர், கிருஷ்ணகுமார் ரத்தினம், ஆனந்த செல்வக்குமார், ரத்தயியல் நிபுணர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:மனித உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒருபுறம் உற்பத்தியாகும் அதேநேரத்தில், மறுபுறம் அழிந்துகொண்டே வரும். ரத்தத்தில் 120 நாள்களுக்கு ஒருமுறை புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. பழைய செல்கள் அழிந்து விடுகின்றன.

இதில் சில ரோகோ செல்கள் (மோசமான செல்கள்) உண்டாகின்றன. இந்த செல்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கின்றன. இந்த செல்கள் 3 மாதங்களில் புற்றுநோய் செல்லாக மாறுகின்றன. இது ஒவ்வொரு 3 மாதத்துக்கும் மடங்குகளாக உற்பத்தியாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. துவக்கத்தில் இது சிறிய புற்றுநோய் கட்டியாக இருக்கும். இக்கட்டியால் பிரச்னை இருக்காது. எனவே, யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து விடுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு நாள்பட்ட இருமல், சளியுடன் ரத்தம், குரலில் மாற்றம், அதிக ரத்தப்போக்கு, ஆறாத புண், மரு மற்றும் மச்சத்தில் மாற்றம், புதிய கட்டிகள் போன்ற அறிகுறிகள் தெரியும்.

நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், நவீன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த வாய்ப்புள்ளது. முன்பு நோயை குணப்படுத்த முடியாது என்ற கூறப்பட்டது. இது வதந்திதான். இன்றைய காலகட்டத்தில் நவீன சிகிச்சைகள் மூலம், நோயின் தாக்கத்தை சிகிச்சைகள் மூலம் 80 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். உயிரிழப்பையும் தடுக்க முடியும்.

சர்வதேச அளவில் இருதய நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம் என்ற நிலையில், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு வகையான புற்றுநோய்களால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2030 ஆம் ஆண்டில் 2.14 கோடி புதிய புற்றுநோயாளிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் 30 சதவீதம் பேரும், வைரசினால் 20 சதவீதம் பேரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கொழுப்புள்ள உணவுப் பொருள்கள், தொடர்ச்சியாக மது அருந்துதல், பான்பராக், குட்கா போன்ற பொருள்களை உட்கொள்வோரை புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இதுபோன்ற பழக்கவழக்கம் உள்ளவர்களில் 20 வயதுக்குட்பட்டோர் அதிகளவில் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் பகுதிகளில் அதிகளவில் புற்றுநோய் பாதிக்கிறது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை ரத்தப் புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இந்நோய் பாதிப்பு நகர்ப்புறம், கிராமப்புறம் எனப் பாகுபாடின்றி இருக்கிறது. உடல் பரிசோதனைகள் மூலம் நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகமுடியும்.

20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற்று குணமடையலாம். எலும்பு மஞ்ஞை புற்றுநோய்க்கு, மஞ்ஞை மாற்று சிகிச்சைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நோய் குறித்த பீதி இனி தேவையில்லை. பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, புற்றுநோய் பாதித்தவர்கள் உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சைv மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம். மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் மூலம் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம், என்றனர்.

(di)