இலங்கை தீர்மானத்தால் அரண்டு போயுள்ள மத்திய அரசு
Posted by sambala87(சூரியன்) மேல் ஜூன் 18, 2011
சமீபத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. “இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; இதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்’ என்றும், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசின் நிலையால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களால் கவலை அடைந்துள்ளது. இந்தியாவிற்கு அண்டை நாடாக உள்ள இலங்கை அரசு மீது அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டினால் அது வேறு விஷயம். ஆனால், தமிழக சட்டசபை தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது பல பிரச்னைகளை மத்திய அரசுக்கு ஏற்படுத்தக்கூடும் என, வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. டில்லி செல்வதற்கு முன் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இது குறித்து பிரதமரிடம் விவாதிக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக்கிறார். அதனால் தான், இலங்கைக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார் ஜெ.,
…………………………………………………
காங்கிரசில் சிக்கலை உண்டாக்கும் சுஷ்மா
பா.ஜ., தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மாவுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்னைகளை உண்டாக்கி வருகிறது. காந்தி சமாதியில் சுஷ்மா நடனமாடினார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராம்தேவை இரவோடு இரவாக டில்லி போலீஸ் வெளியேற்றியதை அடுத்து, பா.ஜ., காந்தி சமாதியில் உண்ணாவிரதம் நடத்தியது. அப்போது தேசபக்தி பாடல்களுக்கு சுஷ்மா நடனமாடினார். இதை காங்கிரஸ் பெரும் பிரச்னையாக்கி விட்டது. ஆனால், தற்போது காங்கிரசுக்கு பெரும் தலைவலி தரும் விஷயத்தை சுஷ்மா ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தான் பொருத்தமான வேட்பாளர் என பேச்சை ஆரம்பித்து விட்டார் சுஷ்மா. காங்கிரசை சேர்ந்த மீரா குமார், சபாநாயகராக நன்றாக செயல்படுகிறார். நன்கு படித்தவர்; வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரியாக ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர். ஆகையால், ஜனாதிபதியாக நன்கு செயல்படுவார் என, சுஷ்மா கூறியுள்ளார். சுஷ்மாவின் இந்த பேச்சை காங்கிரசில் சிலர் வரவேற்றாலும், கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லை. மீரா குமாரும், சுஷ்மாவும் நெருங்கி பழகுகின்றனரா என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இப்படி சபாநாயகரும், எதிர்க்கட்சித் தலைவரும் நெருக்கமாக இருந்தால், பார்லிமென்டில் காங்கிரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என, காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. ஆனால், மீரா குமாரோ அனைத்தையும் அமைதியாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
………………………………………………………….
ராம்தேவும் இந்தி பிரச்னையும்
யோகாசன நிபுணர் பாபா ராம்தேவ், இந்தியில் தான் பேசுவார். அதுவும், சுத்தமான இந்தி. மொழி தெரியாமல் அவருடன் பேசினால் பிரச்னை தான். ராம்தேவ் பிரச்னையை சமாளிக்க, பிரதமர் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு கூடியது. இதில் கலந்து கொண்டவர்கள், பிரணாப் முகர்ஜி, சரத் பவார், தி.மு.க.,விலிருந்து ஒரு அமைச்சர், ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தி தெரியாது. ஓரிரண்டு அமைச்சர்கள் இந்தி பேசினாலும், எழுத படிக்க தெரியாது. பிரதமர் மன்மோகன் சிங், உருது மொழியில் நிபுணர். ஆனால், இந்தி அவ்வளவாக தெரியாது. இந்தி உரையாற்றும்போது கூட, உருதுவில் எழுதித்தான் படிப்பார். இப்படி, இந்தி தெரியாதவர்கள், ராம்தேவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அலசி ஆராய்ந்துள்ளனர். “என்ன செய்வது, அமைச்சரவை அரசியல் குழு அங்கத்தினர்களுக்கு இந்தி சரளமாக எழுத, படிக்க தெரியாது’ என, அங்கலாய்த்தார் அதிகாரி ஒருவர்.
(dm)







amu சொன்னார்
eelam kappatrappada vendum eelam nadu uruvedukka vendum ” j” vuku en nandrigal……..valga tamil eelam……